Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2024 ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை களமிறக்குமா..?

(லியோ நிரோஷ தர்ஷன்)

2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியில் அநுர குமார திசாநாயக்கவும் வேட்பாளராக களமிறங்க உள்ளனர்.

மும்முனை போட்டியாக உறுதிப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்காது தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதே வேளை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் வேட்பாளர் ஒருவர் குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்க வில்லை.

மாறாக அந்த கட்சியின் உள்ளக பிளவுகள் காரணமாக சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் வெவ்வேறு கூட்டணியில் இணைந்து செயல்படுகின்றனர்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் 41  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் அறிவிப்பை ஜனவரியில் இடம்பெறவுள்ள இந்த  கூட்டணியின் கன்னி சம்மேளனத்தின் போது வெளிப்படுத்த உள்ளனர்.

மூன்று பிரதான அரசியல் கூட்டணிகளுக்கு இடையிலான 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுகள் பெரியளவில் வேறுப்படாது தற்போது உள்ளது போன்று இருக்கும்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக ஆகிய இருவரும் வெவ்வேறாக ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து செயல்பட்டு வருகின்றனர்.

எனவே இவர்களது ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானதாகவே உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ள கூட்டணிக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அநுர பிரியதர்ஷன யாபா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி ஆகியன இருக்கும்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பொறுத்த வரையில் ஜனாதிபதி தேர்தல் அந்த கட்சியின் இலக்கு அல்ல என்பதை பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

மாறாக பாராளுமன்ற தேர்தலில் கூடிய ஆசனங்களை பெற்று வெற்றிபெற வேண்டும் என்பதே பொதுஜன பெரமுனவின் இலக்காக உள்ளது. அதே இலக்கில் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் உள்ளது.

ஆகவே தற்போதைய தேசிய அரசியல் நகர்வுகளை மையப்படுத்தி வெளிப்படும்  தகவல்களின் பிரகாரம் ஆளும் ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை தனித்து வேட்பாளரை களமிறக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திரக் கட்சி மஹிந்தையின் சொந்த சொத்தல்ல – நாமல்

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை [UPDATE] 

wpengine

மக்களின் நலன்கருதி விசேட புகையிரத சேவைகள்…

wpengine