ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

✍️ கொரோனா உடல்கள் அடக்கம் எவ்வாறு அடக்கப்படுகின்றன?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா உடல்கள் அடக்கம் எவ்வாறு அடக்கப்படுகின்றன என்பதற்காக தெளிவான விளக்கம் ஒன்று முகநூல் ஊடாக காணக்கிடைத்தது. அதனை நாம் இங்கு பகிர்ந்து கொள்கிறோம்

நாடுபூராகவும் – கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்களில் நல்லடக்கத்துக்கானவை , ஓட்டமாவடி – மஜ்மா நகரில் அடக்கப்படுகின்றன.

அந்தவகையில் ,528 உடல்கள் மஜ்மா நகரில் நேற்று ( 09.06.2021) வரை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் , முஸ்லிம் ஜனாஸாக்கள் – 500.
கிறிஸ்தவர்கள் – 12
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் – 10
பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் – 4
வெளிநாட்டு பிரஜைகள் – 2 .

மஜ்மா நகரில் – 1000 உடல்களை நல்லடக்கம் செய்ய முடியுமென கூறப்பட்டுள்ளது. அதன் பிற்பாடு – வேறொரு இடம் தெரிவு செய்யப்பட்டு நல்லடக்கம் தொடரும் என்றும் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்து இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்களின் நல்லடக்கத்தில் குடும்பத்தினர் சார்பாக இருவர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என்பதால் – அங்கு என்ன நடக்கிறது ? முஸ்லிம் ஜனாஸாக்களுக்குரிய கடமைகள் நிறைவேற்றப்படுகின்றதா ? போன்ற ஐயங்களும் – அங்கு நடப்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவலும் எம்மில் அதிகம் பேருக்கு உண்டு.
அங்கு நடப்பவற்றை பார்ப்போம்..

( முஸ்லிம் ஜனாஸாக்களே – அதிகம் நல்லடக்கம் செய்யப்படுகின்றது என்பதால் , முஸ்லிம் ஜனாஸாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி இங்கு பேசுவோம் )

முஸ்லிம் நபரின் ஜனாஸா – குளிப்பாட்டப்படுகின்றதா ? என்ற கேள்விக்கான பதில் – இல்லை என்பதாகும்.

அதேபோல் – ” கபன்” செய்யப்படுகின்றதா? என்ற கேள்விக்குரிய பதிலும் இல்லை என்பதுதான்.

மரணித்த நபர் – அவர் மரணிக்கும் போது எந்த ஆடையை அணிந்திருந்தாரோ அதே ஆடையுடனேயே அடக்கம் செய்யப்படுவார்.

வைத்தியசாலையிலுள்ள பிரேத அறையில் இருக்கும் ஜனாஸாவை – அந்த ஜனாஸாவின் குடும்பத்தினர் இருவர் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

குடும்பத்தினரே – பலகையால் செய்யப்பட்ட ஜனாஸா பெட்டியை கொண்டு செல்ல வேண்டும்.
ஜனாஸாவை பார்வையிட்ட பின்னர் , பொதி செய்யப்பட்டு – அந்த ஜனாஸா பெட்டிக்குள் வைத்து “சீல்” வைக்கப்படும். நிலைமையைப் பொறுத்து – ஜனாஸா தொழுகையை அந்த இடத்திலும் நிறைவேற்றலாம். அல்லது , அடக்கம் செய்யப்படும் இடத்திலும் ஜனாஸா தொழுகையை நிறைவேற்ற முடியும்.

தொழுகையை அடுத்து – அந்த ஜனாஸா பெட்டியை – இராணுவம்/ பொலிஸ் பொறுப்பேற்கும்.
குடும்பத்தினர் – வாகனம் கொண்டு சென்றால் , ஜனாஸா அந்த வாகனத்தில் ஏற்றப்படும். இல்லையேல் – வைத்தியசாலை அம்பியுலன்ஸில் ஏற்றப்படும்.

பின்னர் , ஜனாஸா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை பொலிஸார் பெற்றுக் கொள்வர்.

ஜனாஸா வாகனத்தில் – சாரதி மற்றும் அவருக்கு அருகில் குடும்ப உறுப்பினர் ஒருவர் இருப்பார். வேறு யாருமே அந்த வாகனத்தில் பயனிக்க முடியாது.

ஜனாஸா வாகனத்துக்கு முன்னால் – இரானுவ வாகனம் பாதுகாப்புக்காக செல்ல அதனை தொடர்ந்து ஜனாஸா வாகனமும் அதன் பின்னால் PHI மற்றும் சுகாதார துறையினர் பயனிக்கும் வாகனம் செல்லும்.

மஜ்மா நகரை அடையும் வரை – எந்தவொரு இடத்திலும் எந்தவொரு காரணத்துக்காகவும் வாகனங்கள் நிறுத்தப்படமாட்டாது.

மஜ்மா நகர் – கிழக்கு மாகாணம் , மட்டக்களப்பு மாவட்டம் – ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.

அதாவது , அம்பாரை மாவட்டத்தில் இருந்து செல்வோர் , ஓட்டமாவடி நகரை தாண்டி – பொலநறுவைக்கு செல்லும் வீதியால் திரும்பினால் சுமார் 5 KM தூரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது.

அந்த இடத்துக்கு சென்றவுடன் – ஜனாஸா வாகனம் மட்டும் நல்லடக்கம் செய்யும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படும். குடும்ப உறுப்பினர் – சுகாதார ஆடை அணியாதவிடத்து அவருக்கு அனுமதி மறுக்கப்படும்.

ஜனாஸா வாகனம் உள் நுழையும் போது – அங்கு கடமையில் இருக்கும் பாதுகாப்பு தரப்பினர் ஜனாஸா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை மீண்டும் பதிவு செய்து கொள்வர்.
நல்லடக்க பகுதிக்கு சென்ற வாகனத்திலிருந்து – அங்கு நல்லடக்க கடமைக்காக நியமிக்கப்பட்டோர் ஜனாஸா பெட்டியை பொறுப்பேற்பர். அதனைத் தொடர்ந்து – வாகனத்தின் உட்பகுதி , சுகாதார தரப்பினரால் தொற்று நீக்கம் செய்யப்படும்.

இந்த வேளை – வாகன சாரதி , எக்காரணம் கொண்டும் வாகனத்திலிருந்து கீழிறங்க முடியாது.
இதன்பின்னர் , அந்த ஜனாஸாவுடன் – ஏனைய பகுதிகளில் இருந்து வரும் ஜனாஸாக்கள் , ஏனைய மத நபர்களின் உடல் பெட்டிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும்.
அங்கு – அந்தந்த மதப் பிரகாரம் பிரார்த்தனைகள் இடம்பெறும்.

முஸ்லிம் ஜனாஸாக்களின் உறவினர்கள் – ஜனாஸா தொழுகையில் ஈடுபடுவார்கள்.
இந்த மத அனுஷ்டானங்கள் சகல இன மரணித்த உடல்களுக்கும் பொதுவாகவே இடம்பெறும்.
இதனை தொடர்ந்து – நால்வர் இணைந்து கயிற்றினால் – குறித்த மரணித்த உடல் பெட்டிகளை குழிக்குள் இறக்குவார்கள். பெக்கோ இயந்திரம் மூலம் குழி மண்ணிட்டு மூடப்படும்.
நல்லடக்கம் செய்யப்பட்ட – ஒவ்வொரு உடல்களுக்கும் , அடையாளப்படுத்தும் வகையில் – அடக்கம் செய்யப்பட்ட வரிசைக்கு ஏற்ப இலக்கங்கள் வழங்கப்படும்.

இந்த இலக்கத்தை – குடும்ப உறுப்பினர்கள் – ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து , அடக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்..இவை – பிரதேச செயலகத்தில் ஆவணப்படுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது.

கொரோனா தொற்றால் மரணித்த அனைவருக்கும் மேலான சுவர்க்கம் கிட்டட்டும்..

ஆமீன்…

✍️ : Boomudeen Malik

நன்றி : ✍️ : Boomudeen Malik

Related posts

04 வருட காலமாக விளையாடாத.. வாழ்நாளில் 06 ஓட்டங்களை விளாசாத.. – உலகக் கிண்ணத்திற்கு தலைமை தாங்கும் திமுத் இனது அறிக்கை இதோ..

wpengine

ஜெயலலிதாவின் உடல் அருகே சிரித்தபடி செல்பி எடுத்த கருணா.. வறுத்தெடுக்கும் வலைவாசிகள்!

wpengine

இலங்கை அணிக்கு பின்னர் ஏனைய வாய்ப்புகளை நோக்கி நான் செல்ல பொருத்தமான தருணம் இது…

wpengine